தேனி, மே 1: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் தேனி முஸ்லீம் ஜமாத் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் தேனி மாநகர் ஜமாத் கமிட்டி இணைந்து தேனியில் உள்ள முஸ்லீம் புதுபள்ளிவாசல் வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. முகாமிற்கு மாநகர் ஜமாத் கமிட்டி தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். தேனி போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் முகாமை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் மகளிர் நலம், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, தோல்நோய், காது,மூக்கு, தொண்டை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, குழந்தையின்மை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் குறித்து நட்டாத்தி நாடார் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்த பரிசோதனைகள் பார்க்கப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை பொதுமேலாளர் சாந்தி, விளம்பர மேலாளர் சலீம், மக்கள் தொடர்பு மேலாளர் ஷேக்பரீத், புதுப்பள்ளிவாசல் தலைவர் சர்புதீன் ஆகியோர் செய்தனர்.