சேந்தமங்கலம், பிப்.12: கொல்லிமலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கொல்லிமலையில் குளிர் அதிகமாக உள்ளதால், இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய குளிர் அடுத்த நாள் காலை 9 மணி வரை நீடிக்கிறது.
காலை நேரங்களில் மழைச்சாலையில் மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்கிறது. மதியத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. மழை இல்லாததால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தங்களது குடும்பத்தினருடன் அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சி முனையம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசித்தனர். சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா, வாங்கி சென்றனர்.