சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதித்து. இந்த உத்தரவை ரத்து செய்து, தாங்கள் குறிப்பிடும் அனைவரையும் விசாரிக்கக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.மனுவில், பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில் அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசி ஆகியோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் ஆஜராகி, வழக்கில் மேல் விசாரணை நடந்துவருகிறது. அதில் யாரை விசாரிக்க வேண்டும், யாரை விசாரிக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, நீலகிரி நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரிய தீபுவின் கூடுதல் மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் ஆஜராகி, மேல் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 217 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்….