காஞ்சிபுரம், ஜன.28: கூழமந்தல் செய்யாற்றில் தைப்பூச பெருவிழாவில், உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் கிராமம் அருகே செல்லும் செய்யாற்றில் தைப்பூச பெருவிழா கடந்த 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் தைப்பூச பெருவிழாவில் கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர், உக்கல் வைத்தியநாதசுவாமி, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர், மானாம்பதி வான சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட 21 கிராமங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் கரை ஓரங்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, பல்வேறு அலங்காரங்களில் ஆற்றினுள் எழுந்தருளினார்கள்.
இதனையடுத்து ஒவ்வொரு சாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, அந்தந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்று, நேற்று காலை 4 மணியளவில் தைப்பூச விழா நிறைவுபெற்றது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.