கிருஷ்ணகிரி, அக்.10: பர்கூர் ஒன்றியம், புஷ்பகிரியில் உள்ள குழந்தை தெரசாள் ஆலயத்தின் 9ம் ஆண்டு தேர்பவனி, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், வேண்டுதல் தேர் பவனியுடன் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் வான வேடிக்கைகளுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசாள் தேர் பவனி நடைபெற்றது. இதனை, மறைவட்ட முதன்மை குரு இருதயநாதன் மந்திரித்து துவக்கி வைத்தார். இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுபேதார்மேடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பங்குத்தந்தை தேவசகாய சுந்தரம் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.