குளித்தலை, ஜூலை 17: குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சிவாயத்தில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவபுரீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ நாளில் கோயில் முன் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் சனிப்பிரதோஷ தினத்தன்று நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் சனி பிரதோஷ நாளன்று நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பழ வகைகள், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பெரியநாயகி உடனுறை சீவபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளத்துடன் கோயிலை சுற்றி வலம் வந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சனி பிரதோஷம் என்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.