மரக்காணம், நவ. 5: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் உள்ள விருந்தினர் மாளிகை வீதியில் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் காலை நேரத்தில் மட்டுமே மீன்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இந்த பொருட்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள் வருவதால் காலை நேரத்தில் தினம்தோறும் கூட்ட நெரிசலாகவே இருக்கும். வழக்கம்போல் நேற்று காலை மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது மார்க்கெட் பகுதி அருகில் உள்ள மரத்தில் இருந்து கூட்டமாக செங்குளவிகள் பறந்து வந்தன.
இக்குளவிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை தாக்கின. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து ஓடினர். இதில் ஆத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(59), மண்டவாய் பகுதியை சேர்ந்த அருணகிரி(55), மரக்காணம் பகுதியை சேர்ந்த பூபாலன்(40) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சங்கர் மட்டும் தொடர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவரும் வீடு திரும்பினர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.