கடலூர், நவ. 5: கடலூர் உழவர் சந்தையில் ஏராளமான காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளன. நேற்று காலை வழக்கம் போல் உழவர் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அங்கு வாழை இலை வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் தான் கொண்டு வந்திருந்த வாழை இலை கட்டுகளை பிரிக்க முயன்றார்.
அப்போது அந்த வாழை இலை கட்டுகளுக்கு உள்ளே பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பாம்பு பிடிக்கும் வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் உழவர் சந்தைக்கு வந்து வாழை இலை கட்டுக்குள் இருந்த 3 அடி நீள நல்ல பாம்பை பிடித்து சென்றார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.