குளச்சல், மார்ச் 27: குளச்சல் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அசோகன் (65). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன், ராஜி ஆகியோருக்கும் இடையே வழிப்பாதை பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே பகுதியில் செந்தில் என்பவர் வீட்டில் காங்கிரீட் வேலை செய்வதற்கு நாகராஜன், ராஜி, செந்தில், பிள்ளவிளையை சேர்ந்த கிங்சிலி, கண்ணன், சுஜின் ஆகியோர் காங்கிரீட் உபகரணங்களை அசோகன் வீட்டு முன் இறக்கி வைத்ததாக தெரிகிறது.
இதனை அசோகன் மாற்றி வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜன் தரப்பினர் உருட்டு கட்டையால் அசோகனை தாக்கி மிரட்டி சென்றனர். இதில் படுகாயமடைந்த அசோகன் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நாகராஜன், கண்ணன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.