திங்கள்சந்தை, மார்ச் 27: இரணியல் பட்டாரியர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்(31). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அரவிந்த் இரணியலில் இருந்து தோட்டியோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். நுள்ளிவிளை ரயில்வே பாலம் அருகில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அரவிந்த்திற்கு முன்னால் சென்ற காரை இடித்து தள்ளிவிட்டு பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற அரவிந்துக்கு இடது கால் முழங்காலில் முறிவு, வலது பக்க விலா, வலது கை தோள்பட்டையில் உள் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.
இந்த விபத்தில் அரவிந்துக்கு முன்னால் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடை சேர்ந்த பிரவீன் ஜோன்ஸ் என்பவர் ஓட்டிச் சென்ற காரும் சேதமடைந்தது. அரவிந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் களியங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அரவிந்த் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குருந்தன்கோட்டை சேர்ந்த குருபிரசாத் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த கார், பைக் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.