உடுமலை, ஆக.23: பனை மர வளர்ப்பு திட்டத்தின்கீழ், உடுமலை அருகே ஜல்லிப்பட்டி குளக்கரையோரம் 300-க்கும் மேற்பட்ட பனை விதைகள் கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மூலம் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த பனை விதைகளில் முளைப்பு ஏற்பட்ட பனை மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஜல்லிப்பட்டி பகுதியில் பனை மரங்கள் முன்பு இல்லை. பனை மரத்தால் கிழங்கு, நுங்கு, பதநீர், ஓலை, மட்டை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பதநீர் மூலம் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
கற்பக தரு என அழைக்கப்படும் பனை மரத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியவை. பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தக்கூடியவை. நீர்பாசனமும் தேவையில்லை. கடும் வெயிலிலும் வளரும். இதை உணர்ந்துதான் இங்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அவை நன்கு வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பனை தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெறும்” என்றனர்.