தஞ்சாவூர், ஜூலை 9: குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2,466 மதிப்புள்ள 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்று வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் 2023ம் ஆண்டு தமிழக அரசால் வேளாண்மைதுறை மூலமாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: வேளாண்மை தொகுப்பு திட்டத்திற்கான ஆவணங்கள் சிட்டா அடங்கல், கணினி சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இத்திட்டத்தில் மானியத்தில் இடுபொருட்கள் வாங்கி விவசாயிகள் பயனடையலாம்.
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2466.50 மதிப்புள்ள 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் உரங்கள் முற்றிலும் இலவசமாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான கிலோ நிலக்கடலை விதை 50 சதவீதம் மானியத்திலும், 80 சிறுதானிய சாகுபடிக்கு சிறுதானிய விதை 4 கிலோ, சூடோமோனாஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்கான மதிப்பில் 50 சதவீதம் மானியமும் மற்றும் குறுவை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 8 கிலோ உளுந்து விதையும், சூடோமோனாஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள், திரவ இயற்கை உரங்கள் மற்றும் தெளிப்புக்கான 50 சதவீதம் மானியமும் இந்த குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற அந்தந்த பகுதி விவசாயிகள் நேரடியாகவே தங்களுடைய ஆண்ட்ராய்டு செல்போனில் உள்ள உழவன் செயலியில் முன்பதிவு செய்திடலாம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி முன்பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.