தஞ்சாவூர், ஜூலை 9: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மைக்கான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் விதமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் 14 கோட்டங்களிலும் சிறப்பு கூட்டு தூய்மைபணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 14 கோட்டங்களில் சிறப்பு தூய்மை பணி முகாம் நேற்று நடைபெற்றது. இதனை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் .அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.
மேலும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொல் காப்பியர் சதுக்கம், நினைவுத்தூண் பூங்காவில் இருக்கும் குப்பைகளை பொதுமக்கள், தன்னார்வளர்கள், குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தூய்மை பாரத இயக்க பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர்கள் மற்றம் தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் செய்திருந்தனர்.