பாலக்காடு: குருவாயூர் கோயில் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானைகள் புணர்த்தூர் கோட்டையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குருவாயூர் கோயில் யானைகளை பார்ப்பதற்கு நாள்தோறும் ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் வந்துசென்ற வண்ணம் உள்ளனர். யானைகளின் நலனை கருத்தில் கொண்டும், பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் 24 மணிநேரமும் செயல்படும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்காக தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும், அத்துமீறி யானைகளின் பக்கத்தில் செல்கின்ற சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.