கும்பகோணம், ஏப்.25: கும்பகோணம் அருகே மணலூர் மகாமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே மணலூர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாள் குதிரை வாகனத்திலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாமாரியம்மன் எழுந்தருள திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை செடில் திருவிழாவும் நடைபெற்றது. விழாவில் பாபநாசம் தாசில்தார் பூங்காடி, வருவாய் ஆய்வாளர் ரெஜிலாதேவி, ஒன்றிய கவுன்சிலர் ஜீவிதா ராஜசேகர், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹாசினி, ஆய்வாளர் லெட்சுமி, கணக்கர் முருகுபாண்டியன் மற்றும் கிராம நாட்டாமைகள், கிராம மக்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.