தாராபுரம், பிப்.20: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் செம்மே கவுண்டம்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரையில் 48 ஊர் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.
200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.200 மீட்டர் போட்டிகளை சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் மற்றும் நந்தவனம் பாளையம் தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து ஆகியோரும் 300 மீட்டர் பந்தயங்களை குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர் மனோரஞ்சிதம் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நேரம் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவு, 300 மீட்டர் பிரிவுகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு தங்க காசு, நினைவு கோப்பை ஆகியவற்றை 48 ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்த ரேக்ளா பந்தயத்தை குண்டடம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, ருத்ராவதி, கள்ளிவலசு, பூளவாடி, தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கண்டுகளித்தனர்.