நாமக்கல், ஏப்.6: கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. 55.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிறப்பு நிலை நகராட்சியாகும்.
நாமக்கல் நகராட்சியின் குடிநீர் விநியோகத்துக்கு, காவிரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு மோகனூர் மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய இரண்டு நீரேற்று நிலையங்கள் மூலம் 19 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகரில் உள்ள 20 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தினமும் நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக போதுமான தண்ணீர் வருவதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி நாமக்கல் நகராட்சி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது கோடை காலம் என்பதால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.