விருதுநகர், பிப்.14: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.