காரைக்குடி, ஏப்.17: காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நகராட்சி சேர்மன் முத்துத்துரை தெரிவித்தார்.
காரைக்குடி நகராட்சி 8 மற்றும் 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கழனிவாசல் புதுரோடு பகுதியில் மிகவும் மோசமான நிலையில், இருந்த மழைநீர் கால்வாய் ரூ.8 லட்சத்தில் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நகராட்சி சேர்மன் முத்துத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்து பேசுகையில், எல்லோருக்கும், எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறையின் வளர்ச்சிக்கு என கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறார்கள்.
இந்நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் பெறப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தேவையான பகுதிகளில் கால்வாய்கள், சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மிகவும் மோசமாக நிலையில் இருந்த கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 46 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத மகத்தான மக்கள் திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் நகரமைப்பு அலுவலர் மாலதி, கண்ணன், கலாகாசிநாதன், சித்திக், பசும்பொன் மனோகரன், முதுநிலை ஒப்பந்தகாரர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.