காரைக்கால், ஏப். 7: காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பட்டினம் திருமலைராஜன் ஆற்று பாலம் அருகில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் சாராயம் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் இருந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும், அதிலிருந்த 15 பிளாஸ்டிக் பைகளில் இருந்த 150 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.