புதுக்கோட்டை,ஜூன்7: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார், வடக்கு நல்லிப்பட்டி பகுதியில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த டாடா சுமோ வாகனத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஓட்டுநர் அசோக்நகரைச் சேர்ந்த அக்பர்அலி மகன் சேக்தாவூத் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.