சென்னை: உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இளைஞர் உயிரிழப்பு:
சென்னை அடுத்த பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் பருமன் காரணமாக ஐ.டி. பொறியாளர் ஹேமசந்திரன் என்பவர் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். ஹேமசந்திரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 21ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22ம் தேதி அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமசந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் மீது புகார்:
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான முறையில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர் பெருங்கோ மீதும், மருத்துவ வசதிகள் குறைவாக வைத்திருந்த பி.பி. ஜெயின் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கர் நகர் காவல் நிலையத்தில், உயிரிழந்த இளைஞர் ஹேமச்சந்திரனின் தந்தை புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னுடைய மகன் உயிரிழப்புக்குக் காரணமாக டாக்டர் பெருங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு:
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பி.பி.ஜெயின் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. பம்மல் பி.பி. ஜெயின் மருத்துவமனையில் செங்கல்பட்டு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் பெருங்கேவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.