காங்கயம்: காங்கயம் அருகே பனியன் நிறுவனத்தில் பணி முடிந்து காட்டு பாதையில் வீட்டிற்கு நடந்து வந்த பெண், கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே நிழலி கிராமம், வஞ்சிபாளையம், கரியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரத்தனசாமி. இவரது மனைவி ரேவதி (35). இவர்களது மகன் ஹரிஷ் (8). ரேவதி, வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ரேவதி, பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். பின்னர், மாலை சுமார் 3 மணி அளவில் வேலை முடிந்து பனியன் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வெகு நேரம் ஆகியும் ரேவதி வீட்டுக்கு வரவில்லை. இதனால், உறவினர்கள் நேற்று காலை அவர் நடந்து வரும் காட்டுவழி பாதையில் சென்று தேடி பார்த்தனர். அப்போது, கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் ரேவதியின் மதிய உணவு பை மற்றும் செருப்பு கிடந்தது. அதிர்ச்சி அடைந்து சுற்றிப்பார்த்தபோது, பி.ஏ.பி கிளை வாய்க்கால் கரையோரம் முட்புதர் அருகே ரேவதி கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,“ரேவதி பணி முடிந்து வீடு திரும்பிய போது ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பாதையில் நடந்து வந்தார். இதை நோட்டமிட்ட கொலையாளி, பின்தொடர்ந்து வந்து அவரை மிரட்டி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். இதில், வேரதி தப்பியோட முயன்ற போது, ரேவதியை பலாத்காரம் செய்து கல்லால் தாக்கி கொன்றிருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் முழு விவரம் தெரிய வரும்’’ என்றனர்….