தேனி, ஏப்.20: தேனி நகரில் தேர்தல் வாக்குப்பதிவு நடந்ததையடுத்து, வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீ தொலைவில் பல்வேறு கட்சியினரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தற்காலிக பூத் அமைத்திருந்தனர். தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. தேனி பாராளுமன்றத் தொகுதியில் 1788 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் மட்டும் 1225 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேனி நகர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக அனைத்து வாக்குச்சாவடி அமைந்த இடத்திற்கு 100 மீ கடந்து, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்களின் சார்பில், ஆங்காங்கே தற்காலிக பூத் அமைத்திருந்தனர். இவ்விடத்தில் வாக்காளர்கள் யாருக்கேனும் வாக்காளர் தகவல் ஸ்லிப் வழங்கப்படாமல் விடுபட்டிருந்தால் அத்தகையோருக்கு வாக்காளர் தகவல் ஸ்லீப் எழுதிக் கொடுத்தனுப்பப்பட்டது.
இதற்காக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் அவரவர் சார்ந்த கட்சிகளின் கொடிகளையும் கட்டியிருந்தனர். இதனால் தேனி நகர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைந்த பகுதிகளில் தற்காலிக பூத் அமைத்திருந்த பகுதியில் தேர்தல் களைகட்டியிருந்தது.