நெல்லை, ஏப்.5: நெல்லை அருகே களக்காட்டில் வீட்டில் பீரோவில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ராமர் (35). இவரது குடும்பத்தினர் கடந்த 2ம் தேதி வெளியூருக்கு சென்றனர். இதனால் வீட்டில் அவரது தாயார் உச்சினிமாகாளி தனியாக இருந்து வந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் சாப்பிட்டு விட்டு வீட்டில் கதவை பூட்டாமல், கதவை திறந்துவைத்த நிலையில் தூங்கினார். பின்னர் அவர் தற்செயலாக விழித்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது கண்டு பதறினார். மேலும் அதில் மருத்துவச் செலவிற்காக வைத்திருந்த ரூ.20 ஆயிரம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்த ராமர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த களக்காடு போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.