கரூர், ஏப்.4: கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவினை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரா சுவாமி கோயிலில் பங்குனி உத்தர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம்தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி மார்ச் 28ம்தேதி அன்று நடைபெற்றது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 5ம்தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.