வேலூர், ஆக. 15: சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தை கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தினை கடைபிடிக்கும் நமது அரசு, இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் பெருமுகையில் 2 ெஹக்டேரில் இடம் தேர்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தங்கும் விடுதி கட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்து அறிக்கை அனுப்ப உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, வேலூர் காகிதப்பட்டறை டான்சி எதிரே உள்ள இடத்தில் தங்கும் விடுதி கட்டுவதற்கான இடம் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்ததுறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி, தாசில்தார் செந்தில் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் அடுத்த பெருமுகையில் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த இடத்தை தேர்வு செய்து, அரசின் அனுமதிக்காக அறிக்கை தயாரித்து அனுப்பி வைத்தோம். மாற்று இடங்கள் தேர்வு செய்து அனுப்பும் படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் வேலூர் டான்சி எதிரே உள்ள இடம், கொணவட்டம் உள்ளிட்ட 3 இடங்களை மாற்றிடமாக தேர்வு செய்து சென்னைக்கு அனுப்ப உள்ளோம். அங்கிருந்து அனுமதி கிடைத்தும், கட்டிடத்திற்கான இடம், வரைப்படம் விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.