திருச்சி: திருச்சி மாவட்ட கலைக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்த அரைமணி நேரத்தில் பயனாளிக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து ஆயிரத்து 224 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.