கலவை : கலவை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புல், புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் புறநோயாளிகள், பிரசவம் பார்பது என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டிக் காட்சியளிக்கின்றன. இதனால் இங்கு பாம்புகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இரவு பகல் என்று பாராமல் பாம்புகள் இங்கு உலாவிக் கொண்டு இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மருத்துவமனை வளாகத்தில் உள்ளே சுமார் 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு நுழைந்தபோது அந்நேரத்தில் மருத்துவம் பார்க்க வந்த இளைஞர் அந்த பாம்புவை பிடிப்பதற்காக முயன்றார். ஆனால் அந்த பாம்பு மருத்துவமனையின் அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்து விட்டது. தொடர்ந்து இதேபோல் அடிக்கடி விஷ ஜந்துக்கள் உலவி வருவதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். எனவே சுகாதார நிலையத்தில் மண்டிக் கிடக்கும் புல் புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….