ஊட்டி, நவ. 19: ஆர்சி காலனி பகுதியில் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வரும் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்பூரம் மரங்கள் நடவு செய்யப்பட்டன. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் புல்வெளிகள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உள்ள புறம்போக்கு நிலங்கள் போன்ற இடங்களில் இந்த மரங்கள் அதிகமாக நடவு செய்யப்பட்டன.
தற்போது, இந்த மரங்கள் நெடுநடுவன வளர்ந்து நிற்கின்றன. மழைக்காலங்களில் சூறாவளி காற்று வீசும் போது இந்த மரங்களில் இருந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன. சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இந்த மரங்கள் விழும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனால், குடியிருப்புகள் அருகே உள்ள இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு அருகே உள்ள இந்த ராட்சத கற்பூர மரங்களை அகற்றாத நிலையில் பொதுமக்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊட்டி அருகே உள்ள ஆர்சி காலனி பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி ஏராளமான கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.