கறம்பக்குடி, ஏப்.6: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் வசித்து வருபவர் செந்தில்குமார். விவசாயி. இவர் இயற்கை சாகுபடியில் குறிப்பாக புடலங்காய், கத்திரிக்காய், பாகற்காய் போன்ற இயற்கை சாகுபடி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது கொடிவகை காய்கறியை சேர்ந்த புடலங்காய் சாகுபடி செய்வதில் புடலங்காய் அதிக அளவில் விவசாயம் செய்து வருகிறார்.
புடலங்காய் ஒரு வெப்ப மண்டல பயிராகும். புடலங்காய் கொடி வகைகள் வளர்ந்து நன்கு படர்வதற்கு இரும்பு கம்பிகள் அமைத்து பந்தல் போட்டு புடலங்காய் பயிர் சாகுபடி செய்வதால் பூச்சிகள் அதிகளவில் இல்லை. இதனால் அதிகவிளைச்சல் கிடைப்பதாக கூறினார். புடலங்காய் கொடி வகைகளை சாகுபடி செய்யும் போது பருவத்திற்கு ஏற்ப 10 நாட்கள் இடை வெளியில் இருமுறை மருந்துகளை தெளிக்க வேண்டும்.
அப்படி தெளித்தால் புடலை விதை ஊன்றிய 80 நாட்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கி பிறகு ஒரு வாரத்திற்கு ஒரு முறை 6 முதல் 8 முறை புடலை அறுவடை செய்து வந்தால் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை இயற்கை சாகுபடியில் புடலங்காய் மகசூல் பெறலாம் என்றும், வருடம்தோறும் இயற்கை சாகுபடி செய்யும் முறை குறித்தும் தெரிவித்தார்.