அறந்தாங்கி, ஏப்.6: அறந்தாங்கியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சவுண்ட் சர்வீஸ் ஊழியர் பலியானார். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (21). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் ஒருவரை நேற்று அரசர்குளம் என்ற ஊரில் பைக்கில் அழைத்துச் சென்று விட்டு விட்டு மீண்டும் ஹரிஹரன் அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
எட்டியதளி என்ற இடத்தில் வந்தபோது அறந்தாங்கியில் இருந்து பைக்கில் வந்த திருவப்பாடியை சேர்ந்த சிவா (28), பிரகாஷ்(21) ஆகிய இருவரும் ஹரிஹரன் பைக்கின் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் ஹரிஹரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சிவா, பிரகாஷ் இருவரும் படுகாயங்ஙளுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.