கறம்பக்குடி, ஜன.13: கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சியில் பல்லவராயன் பத்தை, குழப்பன் பட்டி, ஆத்தியடிபட்டி, புதுவலசல், தொம்பரம் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியின் புதுப்பட்டி மூவர் ரோடு சாலை அருகே அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது.
இதனால் மழைக் காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதை குறுகி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மாணவ,மாணவிகளும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.