திருமயம். ஜன.13: திருமயம் அருகேயுள்ள பள்ளிகளை சேர்ந்த 266 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார். திருமயம் அருகே உள்ள கோனாபட்டு, குழிபிறை, நற்சாந்துபட்டி கிராமங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்தார். இவ்விழாவில் 266 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, பள்ளி மாணவர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார். எனவே மாணவர்கள் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் சிதம்பரம், கணேசன், இலக்கிய அணி மேகநாதன், குழிபிறை ஊராட்சி தலைவர் அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.