கரூர், டிச. 20: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மில்கேட் அருகே வஉசி சாலை சந்திப்பு பகுதியில் வாகன நிறுத்தம் காரணமாக விபத்து ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலை வரை சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையில் மில்கேட் பகுதியில் இருந்து வஉசி தெரு, வடக்குத்தெரு, தனியார் மருத்துவமனை, வெங்கடேஷ்வரா நகர் போன்ற பகுதிகளுக்கான சாலை பிரிகிறது.
இந்த சாலையின் பிரிவு அருகே இரவு நேரங்களில் கார் போன்ற வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் சந்திப்பு சாலையில் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.எனவே, மில்கேட் சந்திப்பு சாலையில் வர்த்தக நிறுவனம் முன்பு வாகன நிறுத்தத்தை கண்காணித்து அதனை சரி செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு இந்த பிரச்னையை சரி செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.