வேடசந்தூர், டிச. 20: வேடசந்தூர் அருகே செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் அருகேயுள்ள மறவபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்- தவமணி தம்பதியரின் மகன் கோகுலநாதன். இவர் எரியோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கோகுலநாதன் வீட்டில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்து, கோகுலநாதனிடமிருந்து செல்போனை பறித்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோகுலநாதன் நேற்று காலை மறவபட்டி வழியாக சென்ற ரயிலின் முன்பு பாய்ந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோகுலநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.