கூடலூர், நவ. 1: கம்பத்தில் நகர காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் காந்தி சிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நகர காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் போஸ் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதை அடுத்து அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில பொறுப்பாளர்கள் கவிஞர் பாரதன், சிவமணி, மனோகரன், கணேசன், சாட்டை சாதிக், பெரியகருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கம்பம் காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முகமது இர்பான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது ஹபீப், பாளையம் ராஜா முஹம்மது, ஊடக பிரிவு மாவட்டச் செயலாளர் பீர் ஒலி, செல்வகுமார், ரோஹித், அப்பிரகாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.