கமுதி, ஏப்.7: கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த வாரம் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுடன் துவங்கியது. பெண்கள் ஆண்கள், சிறுவர்கள் ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை துவக்கினர். தினமும் கோவிலில் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தினமும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடைபெற்றது.
இதில் 300க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தனர். பலர் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அனைவரின் வீடுகளிலும் அசைவ விருந்து சமைத்து சாப்பிட்டு, விரதத்தை முடித்து கொண்டனர். நேற்று மாலையில் கோவில் முன்பு, ஏற்கனவே வளர்க்கப்பட்ட முளைப் பாரியை வைத்தது, பெண்கள் கும்மிபாட்டு பாடி, கும்மியடித்தனர்.
பின்னர் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமான சென்றனர். கோவிலிருந்து துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து, முக்கிய வீதிகள் வழியாக சென்று அப்பகுதியில் உள்ள கண்மாயில், முளைப்பாரியை கரைத்தனர். திருவிழாவிற்காக ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.