தாராபுரம், பிப்.16: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம், கன்னிவாடி வாரச்சந்தையில் வியாபாரிகள், பொது மக்களுக்காக ஆற்றல் உணவகம் தொடங்கப்பட்டது. வாரத்தில் வியாழக்கிழமை தோறும் திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்லவும் விற்பனை செய்யவும் கன்னிவாடி வார சந்தைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு உணவு சேவையை அளிக்கும் வகையில் 10 ரூபாய் கட்டணத்தில் இட்லி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட காலை சிற்றுண்டிகள் வழங்க மலிவு விலை உணவகம் வாரச்சந்தை அருகே துவங்கப்பட்டது.
இதனை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆற்றல் உணவகம் குறித்து நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், ஆற்றல் அறக்கட்டளை கடந்த 3 ஆண்டுகள் முன்பு துவங்கி பல்வேறு சமூக நல திட்டங்களை பல தரப்பு மக்களுக்கு செய்து வருகிறோம்.
ஏற்கனவே ஆற்றல் உணவகங்கள் ஈரோடு தாராபுரம், காங்கயம், குமாரபாளையம் பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வில் மூலனூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், குண்டடம் செந்தில் குமார், தாராபுரம் பாலகுமாரன், தாராபுரம் தெற்கு ரமேஷ், தாராபுரம் கிழக்கு செல்வகுமார், பேரூர் செயலாளர்கள் கன்னிவாடி லட்சுமணனசாமி, மூலனூர் வெற்றிவேல், பொன்னிவாடி ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் மகேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.