கந்தர்வகோட்டை, பிப்.11:கந்தர்வகோட்டை பகுதியில் 100 நாள் வேலை சம்பளம் இரண்டு மாதமாக வழங்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ள பணி ஆட்கள் குளம் வெட்டுதல், கிராம சாலை ஒரங்களை சீர் செய்தல் போன்ற பணிகளும் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கூறும் வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் மொத்த உறுப்பினர்களை ஒன்று சேர்த்து 100 நாட்கள் பணி வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு வங்கி கணக்கில் வேலை பார்த்த பரப்பளவை கணக்கில் கொண்டு கணக்கீடு சம்பளம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை பார்த்ததற்கான ஊதியத்தை செலுத்தாததால் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்கு பொருளாதாரம் இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆகையல் சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்பணி ஆட்களுக்கு உடனே அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியதை செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.