திருமங்கலம், பிப். 12: உரப்பனுர் பஞ்சாயத்தில் நான்கு இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக மேல்நிலைகுடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உரப்பனூர் பஞ்சாயத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதியதாக மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக நேதாஜிநகர், இந்திராகாலனி, மேலஉரப்பனூர் ஆகிய இடங்களில் வைகை கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் கீழ் மேல்நிலைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் மேலஉரப்பனூர், நேதாஜி நகரில் தலா 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவும், இந்திராகாலனியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும் கொண்ட மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் கட்டமாக ஒன்றிய பொது நிதியில் உரப்பனூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளகாபட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் யாசோதை சாமிநாதன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ஜோதிஅரவிந்தன், ஊராட்சி செயலர் இளங்கோ முன்னிலை வகித்தார். மண்டல துணைவட்டார வளர்ச்சி அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் பள்ளகாபட்டியில் புதியதாக குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கபட உள்ளது. நிகழ்ச்சியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தங்களது பஞ்சாயத்தில் புதியதாக நான்கு இடங்களில் மேல்நிலைத்தொட்டி அமைப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக உரப்பனூர் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.