மதுரை, பிப். 12: மதுரை மாவட்டம் சேடப்பட்டி வட்டாரத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் பயிருக்கு பராமரிப்பு எளிது, நல்ல மகசூல் மற்றும் நல்ல விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் விரும்பி அதிக சாகுபடி செய்கின்றனர். ஆனால் இப்பயிரை படைப்புழு தாக்கி தேசப்படுத்தி வருவாய் இழப்பு ஏற்படச் செய்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்புழு குறித்து விவசாயிகளுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சுமதி கூறியதாவது:
இப்பகுதிகளில் பிரதான பயிரானது மக்காச்சோளம். இப்பயிர்களில் படைப்புழுவின் ஆரம்பநிலை தாக்குதல் அறிகுறி தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, சரியான விதை ரகங்களை தேர்வு செய்து சரியான பருவத்தில் ஒரே சமயத்தில் விதைக்க வேண்டும். அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். 15 முதல் 20 நாட்களில் பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டப்படுத்த குளோரன்டிரானிலிபுரோல் மருந்தை 4 மி.லி 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். 35 முதல் 40 நாள் பயிருக்கு மெட்டாரைசியம் மருந்தை 1 ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் பயன்படுத்தி கட்டுபடுத்தலாம் என்றார்.