ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 25: தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் வந்ததாலும், அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள தண்ணீரை வைத்து கோடை விவசாயம் செய்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சுமார் 20 கி.மீ தூரம் நீளமுள்ளது. இதில் 20 மடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1205 கன அடி தண்ணீர் கொள்ளளவும் கொண்டது.
இதன் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியும் கொண்ட சிறப்பு வாய்ந்த இக்கண்மாயில் முதல் போக நெல் விவசாயம் செய்திருந்த நிலையில் அவை அறுவடை செய்த பின்பும் கண்மாயில் தண்ணீர் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பெரிய கண்மாய் பாசனத்தில் தற்போது 2ம் போக கோடை விவசாயத்தில் நெல், பருத்தி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை சில விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பெரிய கண்மாயில் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.