கடையம், பிப். 11: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் சொந்தமாக வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மகேஷ் தனது வேனை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் மகேஷின் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த அவர், வேன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் வேன் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து மகேஷ் கடையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா?, தொழில் போட்டியில் தீ வைக்கப்பட்டதா? பேட்டரியில் ஏற்பட்ட பழுதால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.