கீழக்கரை, மார்ச் 19: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி இடிந்தகல் புதூர், செங்கல் நீரோடை, அலவாய் கரைவாடி, கீழக்கரை 21 குச்சி முதல் சின்ன ஏர்வாடி வரை, மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளது. இங்கிருந்து வலி நிவாரணி மாத்திரைகள், போதை பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஒரு சில குழுக்கள் தயாராகி வருகிறது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வெளியூர் லாரிகளில் கொண்டு வரப்படும் உணவுப் பொருள்கள், வலி நிவாரணி மாத்திரைகள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது.
இத்தகைய கடத்தல் சம்பவங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மூளை சலவை செய்து பயன் படுத்தப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதனை தடுக்க போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார், மரைன் போலீசார், சுங்கத் துறையினர், உள்ளூர் போலீஸ் என அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மூலம் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இளைஞர்களை மீட்கலாம்.