சாயல்குடி: கடலாடி அருகே ஏ.புனவாசல் அய்யனார், கருப்பணசாமி மற்றும் ஏகநாதர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், பல தரப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாகவும், கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாகவும் குதிரை மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக சுமந்து வரும் புரவி எடுப்பு திருவிழா ஏ.புனவாசலில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் திங்கள் கிழமை காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் இளைஞர் ஒயிலாட்டம், பெண்கள் கும்பியாட்டம் ஆடி வருகின்றனர். கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடன் மண் குதிரை செய்ய கடந்த மாதம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. அங்கு தயார் செய்யப்பட்ட குதிரை மற்றும் தவளும் பிள்ளை, கருப்பணசாமி, காளியம்மன், நாகர் உள்ளிட்ட காவல் தெய்வங்கள் உருவத்தை கிராம மக்கள் நேற்று காத்தனேந்தலில் இருந்து வாணவேடிக்கை, பாரம்பரிய இசை வாத்தியங்கள், நாட்புற கலைஞர்கள், குலவை சத்தத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து புனவாசலில் வைத்து வழிபட்டனர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு இன்று கிராம எல்லையிலுள்ள அய்யனார் கோயிலில் வைக்கப்படும்.
கடலாடி அருகே அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
previous post