Tuesday, May 21, 2024
Home » கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கற்போர் வட்டம், வழிகாட்டும் மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு: போட்டி தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கற்போர் வட்டம், வழிகாட்டும் மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு: போட்டி தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை

by Karthik Yash

திருவள்ளூர், ஜன.12: போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைத்த வழிகாட்டும் மையம், கற்போர் வட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு செய்தார். ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பல்வேறு, திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், ஒவ்வொரு மாவட்ட தலைநகர், ஒவ்வொரு ஒன்றியங்களில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் முழு அளவில் பயன்பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதற்காக கற்போர் வட்டம் மற்றும் வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

அந்த வகையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கற்போர் வட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மற்றும் வங்கி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுக்கான நூல்கள், அங்கு பயன்படுத்துவோருக்கான போதுமான வசதிகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கற்போர் வட்டத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் விவரப்பட்டியல் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதுபோன்ற வாய்ப்புகளை போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் கடந்தாண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் மற்றும் இந்த ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுதிய விவரம், மதிப்பெண் பட்டியல்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து, இந்த ஆண்டில் 10, 11, 12வது வகுப்பு தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சிக்கு எடுக்க வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi