வருசநாடு, ஏப்.24: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பள்ளியில் இருந்து கடமலைக்குண்டு பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.
அதைதொடர்ந்து பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, புவி பாதுகாப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு ஓவியங்களை வரைந்தனர். இதில் முதல் 6 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சித்ரா, பசுமை பிரதிநிதி பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட அனைவரும் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.