நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. பஸ்சின் முன்பகுதி இருக்கையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் தாயுடன் அமர்ந்து இருந்தான். அவன் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் கோட்டார் காவல் நிலையம் முன் சென்றபோது, அந்த சிறுவன் திடீரென பஸ் ஜன்னல் வழியாக வெளியே தவறி விழுந்தான். இதை பார்த்த தாய் மற்றும் சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது அந்த சிறுவன், பஸ்சின் பின்சக்கரத்தின் அருகே கிடந்தான். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். உடனே அந்த சிறுவனின் தாய் பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவந்து மகனை தூக்கினார். சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. காயம் அடைந்த மகனை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தாய் ஓடினார். இதனால் கோட்டார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிதுநேரத்திற்கு பின்பு பஸ் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றது….