தர்மபுரி, ஜூலை 7: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த 4 மாதங்களில் ₹54 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் முழுவதும், சுமார் 7 ஆயிரம் ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மஞ்சளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக பயண நேரமும், வாகன செலவும் கூடுதலாகிறது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையின் பலனாக, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆலோசனையின் பேரில், தர்மபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மஞ்சள் ஏலம் துவங்கப்பட்டது. இ-நாம் இணைய தளம் மூலம், விவசாயிகளுக்கு கமிஷன் இன்றி மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்தது. இதையடுத்து மதிகோன்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, மஞ்சள் விவசாயிகள் அதிகளவில் பங்கேற்க ஆரம்பித்தனர். கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 114 விவசாயிகள் 84.245 டன் மஞ்சளை விற்பனை செய்துள்ளனர்.
இதன் மூலம் ₹54 லட்சத்திற்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுபற்றி விற்பனை கண்காணிப்பாளர் முரளிதரன் கூறியதாவது: மதிகோன்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் இ-நாம் போர்ட்டல் மூலம் இணைய வழியில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. இணைய வழியில் நடப்பதால், விவசாயிகள் எந்த கமிஷனும் தரவேண்டியதில்லை. இதன் காரணமாக அதிகளவிலான விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதிக விலையில் மஞ்சளை விற்பனை செய்ய விரும்பினால், இங்கு இதற்கென 2 சாதாரண 600 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குடோன்களும், ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதன குடோன் ஒன்றும் உள்ளன. இந்த குடோன்களில், விவசாயிகள் தங்களது மஞ்சள், பருத்தி என அனைத்து விளை பொருட்களையும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை, ஒரு டன்னுக்கு ₹1 மட்டுமே வாடகையாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 15 நாள் வாடகை இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. இதே போல், குளிர்பதன குடோனில் புளி, தானியங்கள், பழ வகைகளை இருப்பு வைக்கலாம். இருப்பு வைக்கும் பொருட்களுக்கு, 5சதவீத வட்டியில் பொருளீட்டு கடனும் பெறலாம். இங்குள்ள தானிய உலர் களத்தை, விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தி, புளி, கடலை, தானியங்களை காய வைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.